Friday 7 September 2012

காந்தியின் அகிம்சா கொள்கைகள் - 3


சோமசுந்தரத்திற்கு எட்டு வயதாக இருக்கும் போது தாயாரை இழந்தார்இரத்தினசாமிப் பிள்ளைக் குடும்பத்தின் ஆணிவேர் ஆட்டம் கண்டது. சோமசுந்தரத்தையும் அவருடைய உடன்பிறப்புகளையும் கரை சேர்க்க இரத்தினசாமிப் பிள்ளை இரவு பகலாக உழைத்தார். அவர் பட்ட வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தாய் இல்லாமல் பிள்ளைகளும் தவித்து நின்றனர்.

தந்தையார் இரத்தினசாமி பிள்ளை
அப்போது அவருடைய தந்தை, தெலுக் இந்தானில் ஒரு சின்ன மளிகைக்கடையை வைத்து இருந்தார். பெரிதாக வருமானம் ஒன்றும் இல்லை. இந்தக் கட்டத்தில் இரத்தினசாமிப் பிள்ளைக்கு நோய் நொடிகள் ஒரு பக்கம். இயற்கை உபாதைகள் மறுபக்கம். மருந்து மாத்திரை என்று இன்னொரு பக்கம். பிள்ளைகள் எல்லாரும் சாப்பிடுகிற வயதிலும் படிக்கிற வயதிலும் இருந்தார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதியே செல்லும்

1900களில் தெலுக் ஆன்சன் இரயில் நிலையம்
சோமசுந்தரம் பள்ளியில் படிக்கும் போது, தந்தையாரின் மளிகைக்கடையில் வேலை செய்தார். பல மாதிரியான எடுபிடி வேலைகள். வேலை செய்யும் கடையிலேயே தங்கிப் படிப்பையும் தொடர்ந்தார். கடையில் கிடைக்கின்ற ஊதியத்தில் உடன்பிறப்புகளுக்கு ஆதரவாகவும் இருந்து வந்தார்.  

மகாத்மாவின் கொள்கைகளினால் கவரப்பட்ட டான்ஸ்ரீ சோமா
இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவில் காந்தியின் விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மகாத்மாவின் விடுதலைப் போராட்டத்தில் சோமசுந்தரம் ஈடுபாடு கொண்டார். அவருடைய கொள்கைகளினால் கவரப்பட்டார். மகாத்மா காந்தி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும் உறுதி மனப்பான்மை, சோமாவையும் பற்றிக் கொண்டது. எடுத்துக் கொள்ளும் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதையும் அப்போது அவர் கற்றுக் கொண்டார்

இதைத்தவிர, காந்தியின் எளிமையும் மது எதிர்ப்புக் கொள்கைகளும் இவரைப் பெரிதும் கவர்ந்தன. பின்னர் காலத்தில், தெலுக் இந்தானில் கள்ளுக்கடை மறியல் போராட்டங்கள் நடைபெற்ற போது, அதில் இவர் தீரமாகக் கலந்து கொண்டார். எளிமையைப் பாராட்டுவதும், ஏழைகளுக்காக இரங்குவதும் இன்றுவரை அவரிடம் மாறாமல் தேங்கி நிற்கும் காந்தியக் கொள்கைகள்

No comments: